Mr.V.HEYMONTH KUMAR B.A.,(Eng) B.Ed.,

Mr.V.HEYMONTH KUMAR B.A.,(Eng) B.Ed.,

Thursday, July 2, 2020

கூழாங்கல் நினைவுகள்


கரைந்த காலத்தின்
எண்ணக் கரைசல்கள்,
கடற்கரையில் பொறுக்கிய
வெளுத்த பூமிகள்
என் பிஞ்சு கைகளில்...

தரையில் நடந்து
மனதில் மிதந்து,
நீந்தாக் கடலலைகளில்
சிக்கி மீண்ட
ஆனந்த மனச்சோர்வுடன்
உருண்டு புரளும் மணலில்
நான் கட்டி சரிந்த
மனக்கோட்டை;

அவற்றை நினைத்து
இன்னும் 'துடிக்கிறது'
என் முதிர்ந்த இதயம்,
கண்களிலிருந்து நீர்வீழ்ச்சி;
மாற்றுப்பாதையில்
அக்கடல்நீரே!
நான் உயிருடனிருப்பதன் சாட்சி.

90'ல் பிறந்தவர்கள் (90's Kids)


வாழ்க்கையில் இயற்கையையும்
இயந்திரங்களையும் இரசித்த
ஒரே தலைமுறையாக நாங்கள்!
எல்லாவற்றையும் வியந்து
பார்த்தவர்கள்...

இணையத்தில் இந்திரனாக இளையவர்கள்,
இயந்திரங்களை இடையூறாக பெரியவர்கள்;
இவர்களுக்கு மத்தியில் நாங்கள்,
குழப்பத்தின் கிளையில்
தலைகீழாக தொங்குகிறோம்!!

காதல் அம்புகள் திசைமாறின---
தேவதைகளுக்கு காத்திருந்தே
எங்களின் வாழ்க்கை தேய்ந்தது,
எங்கள் வயது பெண்கள்
எல்லாம் திருமண சந்தையில்
வெகுவிரைவில் விலை போனார்கள்;
கனவால் கன்னிகழியாத
நாங்கள், மீண்டும் பிறந்தாவது
அப்பாவி தேவதைகளை
மணம் முடிப்போம்.

மனிதம்


நீ வழுக்கி விழுந்தாய்,
என் கை பிடித்தது;
நான் வழுக்கி விழுந்தேன்,
உன் கை பிடித்தது;
நம்மை தூக்கியது கடவுள்!

கண்ணுக்குத் தெரியாத
உயிரின் வருடல்,
காதுக்குக் கேட்காத
ஆன்மாவின் குரல்,
வாழும் மனிதம்!!

இருளின் அழைப்பு



தினசரி பொதுவாக நிகழும்
இதிகாச திருமணத்திற்கு
அழைப்பிதழாக வானம்,
அதில் வண்ணமயமான இருள்;

சூரியனுக்கும் சந்திரமதிக்கும்
மாலையில் திருமணம்,
இருமணி நேரத்தில் ஆயிரம்
குழந்தைகள்--- விண்மீன்கள்;

இப்படியாக காதலின் அழைப்பு:
இன்றே நேற்றைய அழைப்பு,
இது நாளைய அழைப்பு,
நாளை மற்றுமொரு அழைப்பு!

தீக்குளிப்பு



ஐயோ, இது கொலைகள்
நிறைந்த வாழ்க்கையடா;
கசாப்புகடைக்கு ஆட்டை
விற்றவனுக்கு, தாய்ப்பாசம்!

பெற்ற ஆடு கைவிட்ட
குட்டியைச் சுமந்தவன்,
துள்ளிச் சென்ற குட்டியின்
பின் அயராது ஓடியவன்;

அக்குட்டி வளர்ந்து ஆடாக
இவனுக்கும் வெள்ளி நரைமுடி,
முதுமையில் பணப்பசி---
ஆட்டை அறுக்க விற்றான்.

அன்றிரவே பிறந்தது ஒளி,
தேவலோகத்தில் ஒரு ஆடு;
மனசாட்சிப்படி இவனுக்கு
தினமும் "தீ"ராத் தீக்குளிப்பு...

இணைய வழி கல்வி


கடலான கல்வி
கரை கடந்தது இன்று---
நிலத்திலும் வானிலும்,
அறிவு வெள்ளம்!

சாக்கடையாக சாதிகளும்,
கூவமாக மதங்களுமில்லாத
"உடனுழை" கற்றலின் எழுச்சி,
இணையத்தின் புரட்சி!!

காலம் காகிதங்களை
கிழித்தெறியலாம்,
காற்றில் பரவும் அழியா
அறிவுத்தொற்றுகளை?

மின்னல் வேகத்தில்
கல்வியின் எதிரொலி,
மின்னஞ்சலில் மின்சான்றிதலாக
புதிய உருவத்தில் சரஸ்வதி.


வராத தூக்கம்!



இருண்ட வானில்
நட்சத்திரங்களே இல்லை,
மனதுக்குள் ஆயிரம்
ஒளிர்கின்றன;

விழிகள் பாரத்தினால்
போர்த்திக் கொண்டன,
மூளைக்கும் இதயத்திற்கும்
ஓயாத பனிப்போர்...

(சுடு)காடு


இயற்கையோ எங்களுக்கு
கொடுத்தது, ஒரு முத்தம்!
நாங்களோ இயற்கையோடு
நடத்தினோம், ஒரு யுத்தம்!!

நம்பிக்கை துரோகிகளாக
இயற்கையை வென்றோம்;
வனவிலங்குகள் அத்துமீறல்
என்று அவற்றையும் கொன்றோம்;

நவீனமாக மாசுபடுத்திய காற்றே
எங்களுக்கு உயிர்குடி விஷமானது,
நாங்கள் வெட்டிய மரங்களின்
இரத்தம் செக்கச்சிவந்த ஆறானது.

தோல் போர்த்தி உடல் மெலிந்த
நாங்கள், நடைபிணங்கள்.
இன்னும் மனித வேட்டையில்
இயற்கையின் ஆன்மா...

இவளின் அவலம்


விண்ணிலிருந்து மண்ணில் பிறந்த
தேவதைகளுக்கு, கள்ளிப்பால்
அபிஷேகம்--- உடனடி வீடு திரும்பல்!

காட்டுமிராண்டித்தனமான கலாச்சார
சந்தையில் இவளொரு சுமைதாங்கி,
இவளுக்கு மட்டுமே கற்பும் காப்பும்;

எழுதித் தீர்த்தாலும் வலிகளைச் சுமக்கும்
சொற்களுக்கு எடை கூடுவதில்லை...
எக்காலத்தில் இவளுக்கு விடியும்?

இவளின் ஓங்காத கைக்குப் பூட்டிய
சங்கிலியை உடைத்தெறிய இவளுக்குப்
பிறப்பாள், இன்னொரு இலக்கியப் பெண்!!

இந்த புல்லே போதும்


இந்த காட்டு வாழ்க்கையில்
ஆடுகளாக நாம்,
ஒரு காரியத்தை ஒதுக்க
ஓராயிரம் காரணங்கள்;

புல்லை மேய்ந்த நம்
இரைப்பை கசாப்புகடையில்,
நம்பிக்கையை கேடயமாக்கி
நீ மந்தையிலிருந்து பயணி;

வேலியைத் தாண்டினால்
நாம் பயிறை மேயலாம்,
மனச்சிறையை உடைத்தெறி
சிங்கங்களை ஆள்வோம்!

ஐயோ!! கனவு கலைந்தது,
கசிந்தது என் இரத்தம்!
எந்த கசாப்புகடையில்?
நான் கத்தி முனையில்!!!

லட்சியத்துடன் வேட்டையாடும்
புலியல்ல நாம்.
உண்மையில், பசிக்கு மேயும்
வெறும் ஆடுகள் தானே;
நமக்கு இந்த புல்லே போதும்...

யார் வாசித்த புல்லாங்குழல்?


காதில் மழைச் சாரல்,
அது காதல் மழையின் தூறல்;
நெஞ்சத்தை வருடும் இசை,
அடர்ந்த காட்டிற்குள் நுழையும் திசை;

அங்கு ஏதோ ஒரு கண்ணன்!
என் காவியத்தில் அவன் மன்னன்;
மயிலிறகின் வண்ணமுடைய நிலம்,
அதைப்பார்த்து உறைந்தது என் நலம்;

அவன் உதட்டில் தேங்கியுள்ள அன்பு,
கிழித்தது என் இதயத்தை காதல் அம்பு;
ஆழ்மனதை கவ்வியிழுக்கும் நீலக்கண்,
நானோ பருவமடைந்த ஒரு வெகுளிபெண்!!

இசை படர்ந்த அழகிய வனம்,
சொக்கி அலையும் நீண்ட வானம்;
அக்காட்சியை சுமந்து தவிக்கும் என் விழி,
கசிந்த இசையாக தெய்வத்தின் மொழி;

திடீரென்று ஒலியை மிஞ்சிய ஒளி,
மறைந்த அவனால் எனக்கு கண்ணீர்த்துளி;
உறக்கம் கலைந்து வாடிய என் சூழல்,
மீண்டும்!!! அது யார் வாசித்த புல்லாங்குழல்?

நாமே சிற்பி! நாமே சிலை!!


இம்மண்ணில் யாரோ இறந்த
அறிஞர்களின் விதையில்,
தவறி முளைத்த கரடுமுரடான
"பா"றைகளாக நாம்!

கல்வியாகிய கணமான
உளியெடுத்து, நம்மை நாமே
ஒரு மிகத் தரமான சிற்பமாகச்
செதுக்கிக் கொண்டிருக்க;

கழி(கரை)ந்து விழும் கற்களுடன்
பிடியின் அதிக (மன)அழுத்தத்தால்,
மனிதநேயமும் உருண்டோடுகிறது
ஏதோ அ"நா"வசிய உறுப்பாக...

கருங்குதிரை



நிற்காத ஓட்டம் என்பதே வாழ்க்கை,
இந்த சாபத்தை வரமளித்தது இயற்கை!
மனிதனுக்கு நானும் ஒரு வாகனம்,
உண்மையில் நானோ--- வெறும் நடைபிணம்;

குருட்டு உலகத்தில் நிற வேறுபாடு,
யாருக்கும் கேட்காது என் கூப்பாடு;
வேகத்தில் காலத்தைக் கடந்தவன்,
முதலாளியை முதுகில் சுமந்தவன்;

சதுரங்கத்தில் மட்டுமே மகத்துவம்,
வெண்மைக்கும் கருமைக்கும் சமத்துவம்!!
முதிர்ந்தாலும் எனக்கு வராது நரை,
நானோ அரசனை வெட்டும் கருங்குதிரை...

திசைப்பூனை


பசிப் பிணியால் துடித்த
வறுமைப்பூனை,
நடக்கும் எத்திசைக்கும்
கெட்ட சகுனம்;

தின்று கொழுத்த
மனிதனின் தூக்கம்,
மதியற்று விதியை நம்பும்
ராசியான குருடனிவன்;

உற்சாகப்பூனை
அங்கு உணவு தேட,
உறங்கிய மடையன்
ஊர் சுற்ற எழுந்தான்.

பரிதாபப்பூனை
பசியால் அலைய,
பைத்தியகார மனிதன்
தெருவில் நடந்தான்;

அப்பாயும் பூனை
"குருவிக்கு புலியாக",
குறுக்கே வந்த முட்டாளுக்குக்
கெட்ட சகுனமாம்!!

வீடு திரும்பிய சோம்பேறி
இவனுக்குத் தெரியாது,
அது தன் உழைப்பால்
சகுனமற்ற திசைப்பூனை...

அவளே அவள் தான்


அதோ! அவள் நிலத்தை
நிழலென வருடி வருகிறாள்,
குளிர்ந்த நிலவான முகத்தில்
இரு தீப்பந்தங்கள்--- விழிகள்;

அந்த செவ்விதழ்கள் என்னை
மட்டுமே அடைத்துப் பூட்டிய சிறை;
அவளின் பற்கள் கண்ணாடித்
துண்டுகள், என் இதயத்தை கிழித்தன.

இதயத் தழும்புகளை மறைக்க,
காதலை காய்ச்சி ஊற்றினேன்;
என் கொதித்து துடிக்கும் இதயம்
அவளது ஒரே பார்வையில் சரணம்.

ஊமைக்கிளி


சுதந்திரக்கிளி வானத்தை வருட,
மனக்கூண்டில் சிக்கிய மனிதன்!
சிறகடித்துத் திரிந்த கிளிக்கு,
நண்பனின் அறையாய் கூண்டு;

பேசும் நட்பு கிளியின் அருகே,
பேசாத கிளிக்குத் தண்டனை!!
வலியைத் தாங்கும் புரட்சிக்கிளி,
பேசும் திறமையற்ற ஊமைக்கிளி;

அந்த நாகரிகமான பைத்தியகார
மனிதனுக்குத் தெரியாது---
அது வானத்தை ஆளப்பிறந்த,
பருந்தாகப் "பறக்கும்" கிளி...